சென்னை ரேஷன் கடைகளில் பொருட்களின் தரம் குறித்து ஒன்றிய அரசு அதிகாரி ஆய்வு

3 hours ago 4

சென்னை: ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோக திட்ட துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டச் செயலாக்கம் தொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து சென்னை நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள 3 நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த குடும்ப அட்டைதாரர்களிடம் பொது விநியோக திட்ட சேவை மற்றும் பொருள்களின் அளவு, தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கூட்டுறவு துறைக்கு சொந்தமான மலிவு விலை மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடியினை பார்வையிட்டு விபரம் கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் கூட்டுறவு துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய உணவு கழகம், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன உயர் அலுவலர்களுடன் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் இயக்குநர் மோகன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை ரேஷன் கடைகளில் பொருட்களின் தரம் குறித்து ஒன்றிய அரசு அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article