குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு

4 days ago 5

திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் குடியிருப்புக்கு நடுவில் அமைந்துள்ள மதுபானக் கடையை உடனடியாக மாற்றக்கோரி கலெக்டரிடம் நகராட்சி கவுன்சிலர் மனு கொடுத்துள்ளார். திருவள்ளூர் நகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி சீனிவாசன் தலைமையில் பெரியகுப்பம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு, திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பம், ரயில் நிலையம் அருகில் மதுபான கடை அமைந்துள்ளது.

இந்த மதுபானக் கடையால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் திரிகின்றனர். இவர்கள் மத்தியில் நாங்கள் வசிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். அதிகமாக மக்கள் வாழ்கின்ற இடத்தில் மதுபானக்கடை இருப்பதால் எங்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இந்த மதுபானக் கடையை மாற்றி வேறு இடத்தில் வைக்குமாறு பலமுறை நாங்கள் மனுக்கள் கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த மதுபானக் கடையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும். கலெக்டர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article