சென்னை: இந்தியாவில் பல மாநிலங்களில் காசநோய் பாதிப்பு சவாலாக உள்ள நிலையில், தமிழகத்தில் காசநோய் பாதிப்பில் இருந்து 85 சதவீதத்தினர் குணமடைகின்றனர் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காசநோயால் பாதிக்கப்படுவோரில் 49.01 சதவீதம் அரசு மருத்துவ மனைகளிலும், 49.75 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும், 1.24 சதவீதம் பேர் இந்திய முறை மருத்துவத்திலும் சிகிச்சை பெறுகின்றனர். காசநோய் பாதிப்பை கட்டுப்படுத்தவும், இறப்பை தடுக்கவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.