
சென்னை,
கடந்த 13-ஆம் தேதி நடந்த மருத்துவ தினத்தை யொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரக்கூடிய 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது. திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வளர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருக்குறள் புத்தகத்தில் கவர்னர் மாளிகை தரப்பில் அச்சிட்ட குறளை தேடிய போது, 944 -என்ற எண் வரிசையில் அப்படி ஒரு திருக்குறள் இல்லை என்பது தெரியவந்தது. அந்த திருக்குறள் ஒரு போலியான திருக்குறள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக கவர்னர் மாளிகை நிர்வாகம் 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் திரும்ப பெற்ற திட்டமிட்டிருப்பதாகவும் திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை அச்சிட்ட திருக்குறள்
செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. (திருக்குறள் 944)
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
இந்தநிலையில், கவர்னர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள்: இது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில்,
13-7-2025 அன்று 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலைத் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது.
அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சிறந்த மருத்துவர்களுக்கு கவர்னர் கொடுத்த விருதில் ஒரு போலி 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி
'குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது.
குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை 'குறள்' என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் போலிச் சித்திரம், போலிக் குறள் ....இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என பதிவிட்டுள்ளார்.