சென்னை: உத்தராகண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கிய 30 ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அதில், 10 பயணிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆதிகைலாஷ் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, வழியில் ஆதி கைலாஷில் இருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர். நிலச்சரிவால் சாலை பாதிக்கப்பட்டதால், அவர்கள் 6 நாட்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி இல்லாததால் 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகினர்.