கடலூர்: உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் 30 பேரும் பித்தோராகாரில் இருந்து வேனில் பத்திரமாக டெல்லிக்குப் புறப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம், ஆதி கைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிகச் சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக, அவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் ஆதிகைலாஷ் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ஆதி கைலாஷிலருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஓர் ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர்.