மும்பை: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் இருந்து லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளது.நடப்பு ரஞ்சி சாம்பியன் மும்பை அணியுடன் இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) மோதும் இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1ம் தேதி மும்பையில் தொடங்குவதாக இருந்தது. மும்பையில் தற்போது அடிக்கடி கனமழை கொட்டி வருவதால், இந்த போட்டி லக்னோவுக்கு மாற்றப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரானி கோப்பை போட்டி முதல் முறையாக லக்னோவில் நடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியை நடத்த மிகவும் ஆர்வமுடன் உள்ளதாக உத்தர பிரதேச கிரிக்கெட் சங்க செயலர் அரவிந்த் குமார் வஸ்தவா தெரிவித்துள்ளார்.
கான்பூரில் இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இரானி கோப்பை போட்டி தொடங்க உள்ளதால், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆண்டுக்கான ரஞ்சி சீசன் பைனலில் மும்பை அணி 169 ரன் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி 42வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இரானி கோப்பையில் களமிறங்கிய ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா 175 ரன் வித்தியாசத்தில் இதர இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது.
The post இரானி கோப்பை கிரிக்கெட்: மும்பையில் இருந்து லக்னோவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.