சென்னை: மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் அரசியலமைப்புச் சட்டக் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில், திமுக ஆட்சிக்காலம் முடிவதற்குள் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு எள்ளளவும் இல்லை; ஆனால், உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்; அதனால் தான் மதுக்கடைகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த மக்கள் மீது பழிபோடுவது கண்டிக்கத்தக்கது.