சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாடி நபிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மத நல்லிணக்கம், சகோதரத்துவம் தழைக்க அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து தலைவர்கள் தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும்.