
எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
7-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை அணி 4-1 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தை தோற்கடித்து 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்ததுடன் இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கையில் அரையிறுதியையும் உறுதி செய்தது. கடற்படை அணியில் அஜிங்யா ஜாதவ் (17-வது, 35-வது நிமிடம்), செல்வராஜ் (33-வது, 36-வது இடம்) தலா 2 கோல் அடித்தனர். மத்திய நேரடி வரிகள் வாரிய அணியில் மெக்கீத் சிங் (23-வது நிமிடம்) ஆறுதல் கோல் அடித்தார். 4-வது தோல்வியை சந்தித்த நேரடி வரிகள் வாரிய அணி வெளியேறியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 2-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. ஒரு டிரா கண்டுள்ள மராட்டிய அணிக்கு இது 3-வது தோல்வியாகும். அத்துடன் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ராணுவ அணியில் பிரதீப் சிங் பிஸ்த் (29-வது நிமிடம்), நீரஜ்குமார் சிங்கும் (53-வது நிமிடம்), மராட்டிய அணியில் கணேஷ் பட்டீலும் (21-வது நிமிடம்) கோல் போட்டனர்.
இன்னொரு ஆட்டத்தில் கர்நாடகா-மலேசியா ஜூனியர் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கர்நாடகா அணியில் சூர்யா (7-வது நிமிடம்), பாரத் மகாலிங்கப்பாவும் (18-வது, 32-வது நிமிடம்), மலேசியா ஜூனியர் அணியில் அஜிமுதீன் ஷகிர் (29-வது நிமிடம்), முகமது ஹன்ட்ஜாலா (47-வது நிமிடம்), முகமது ஆடம் அஷ்ரப்பும் (59-வது நிமிடம்) கோலடித்தனர். 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி கண்ட கர்நாடகா, மலேசியா ஜூனியர் அணிகள் அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்தன.
இன்று நடைபெறும் கடைசி நாள் லீக் ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே-போபால் என்.சி.ஓ.இ. (பிற்பகல் 2.30 மணி), இந்திய கடற்படை-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.