48 மீனவ கிராமங்களையொட்டி குமரி கடற்பகுதியில் இன்று சஜாக் ஆபரேசன்: கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் தீவிர பயிற்சி

2 hours ago 4


கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை சஜாக் ஆபரேசன் என்ற பெயரில் ஒரு நாள் கடல் வழி பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கினர். இந்த பாதுகாப்பு ஒத்திகையானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்புப்படை, கியூ பிரிவு, மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் என்று அனைத்து பாதுகாப்பு குழும போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்ட மீனவ கிராமங்களான ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம், மணக்குடி, வாவுத்துறை உள்பட 48 மீனவ கிராமங்களையொட்டிய கடல் பகுதியில் அதி நவீன ரோந்து படகுகள், தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் காணப்பட்டால் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தெரிவிக்குமாறு மீனவ கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். அதேபோல் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிவிரைவு விசைப்படகுகளில் தொலைநோக்கு கருவிகள் உதவியுடன் தொலைதூர பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது குமரி கடலில் செல்லும் படகுகளை வழிமறித்து சோதனை செய்ததோடு அவர்களிடம் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவர்களிடம் கடலில் சந்தேகம்படும்படி கப்பல்கள், படகுகள் தென்பட்டாலோ கடலோர குழும போலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர்.

The post 48 மீனவ கிராமங்களையொட்டி குமரி கடற்பகுதியில் இன்று சஜாக் ஆபரேசன்: கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் தீவிர பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article