சென்னை: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கான வரைவு அறிக்கையானது கால்நடை பராமரிப்புத்துறையால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “நாய்கள் இனப்பெருக்கம், வணிகம், விற்பனை ஆகியவை பெரியளவிலான வர்த்தகமாக நடைபெறுவதால், ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான தொகைக்கு விற்பனை நடைபெறுகிறது. மரபு சாரா இனப்பெருக்கம் மூலம் குறைபாடுள்ள நாய்க்குட்டிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.