
புதுடெல்லி,
மத்திய அரசாங்கத்துக்கு நிதி ஆயோக் எப்படி பல கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறதோ, அப்படி தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்பது மாநில திட்டக்குழுவாகும். இது முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் ஒரு உயர்மட்ட ஆலோசனை குழுவாகும். இந்த குழு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் முன்னோடி மக்கள் நலத்திட்டங்களை மதிப்பீடு செய்து அறிக்கையாக அரசிடம் தாக்கல் செய்கிறது. இதன்மூலம் நிறைவேற்றி செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு போய் சென்றடைந்துள்ளதா? உரிய பலன் கிடைத்துள்ளதா? அந்த திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டியது இருக்கிறதா? என்பதை அரசு தெரிந்துகொள்ளமுடியும்.
இதுபோல ஏதேனும் புதிய கொள்கை முடிவுகளை அரசு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா? என்பதையும் திட்டக்குழு நன்கு ஆராய்ந்து அறிக்கையாக அரசிடம் வழங்குகிறது. பொதுவாக திட்டக்குழுவின் ஆய்வுகளும், பரிந்துரைகளும் அரசுக்கு மிகுந்த நன்மை பயப்பதாக இருக்கிறது. தற்போது தமிழக திட்டக்குழுவின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை தலைவராக ஜெயரஞ்சனும், உறுப்பினர்-செயலராக இந்திய வனப்பணி அதிகாரி சுதா மற்றும் உறுப்பினர்களும் பணியாற்றுகிறார்கள். இந்த குழு கடந்த வாரம் திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-வடிவமைக்கும் பாதை என்ற தலைப்புகளின் கீழ் 4 அறிக்கைகளை தாக்கல் செய்தது.
இதில் முதல் அறிக்கை தமிழ்நாட்டில் வேளாண் தொடர்பான நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியது. தமிழ்நாட்டில் 2012 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் உள்ள விவசாய நிலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயத்தை சார்ந்து இருந்த மக்கள்தொகை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது விவசாயத்தை சார்ந்து இருந்த 20 சதவீத மக்கள் விவசாயம் அல்லாத வேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர். மொத்தத்தில் 81 சதவீத ஆண்களும், 71 சதவீத பெண்களும் விவசாயம் சார்ந்த வேலைகளில் இருந்து வேறு பணிகளுக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்குத்தான் செல்கிறார்கள். குறிப்பாக இளம்வயதினர் கட்டிட வேலைக்கு செல்வதற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கிடைக்கும் கூலிதான்.
எடுத்துக்காட்டாக கட்டிட வேலைக்கு சென்றால் குறைந்தது ரூ.800 கூலியாக கிடைக்கிறது. ஆனால் விவசாய வேலைகளில் அவ்வளவு சம்பளம் கிடைப்பதில்லை. மேலும் விவசாயத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. இதுவே விவசாய பணிகளுக்கு ஆட்கள் செல்லாததற்கு காரணமாகும். பெண்களை பொறுத்தமட்டில் உற்பத்தி துறைக்கே அதிகம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களில் வயது வித்தியாசம் இல்லாமல் உற்பத்தி துறை சார்ந்த பணிகளுக்கு செல்வதையே விரும்புகிறார்கள். மேலும் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் கூட தானியங்கி முறையில் பல பணிகளை செய்யமுடிவதால், அந்த பணிகளோடு விவசாயம் சாராத வேலைகளுக்கு சென்று வருவாய் ஈட்டிக்கொள்கிறார்கள். ஆக விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் எந்திரமயமாக்குவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். உழுவது முதல், விதைப்பது, களை எடுப்பது, நீர் பாய்ச்சுவது, வரப்புகளாக சீர் செய்வது, அறுவடை செய்வது என அனைத்து பணிகளும் இப்போது எந்திரமயமாகிவிட்டது.