தருமபுரி: "விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேவையான நேரத்தில் நடத்தப்படுகிறது. அதை நடத்துகிறவரின் நோக்கத்தை அந்த மாநாட்டின் முடிவில்தான் அறிய முடியும். என்றபோதும் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை பாஜக வரவேற்கிறது" என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா, மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா நினைவு ஆலய வளாகத்தில் வழிபட கடந்த 2022ம் ஆண்டு பாஜக நிர்வாகிகள் முயன்றனர். அப்போது காவல்துறையின் தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு இவ்வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று தருமபுரி மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.