சென்னை: “திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுக்குள் இரண்டு முறை சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரி உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களின் தலையில் இடியை இறக்குவது தான் விடியலை தருவதா?” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்து வரி மேலும் 6% உயர்த்தப்பட உள்ளது. பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இந்த சொத்து வரி உயர்வு கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.