சென்னை: எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் புகைப்பிடித்ததால், எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. உடனடியாக, ரயிலை நிறுத்தி சோதனை செய்த ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள் புகைப்பிடித்த பயணியை பிடித்து விசாரணை நடத்தினர்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று (செப்.9) பிற்பகல் 2.50 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் நேற்று மாலை 4.15 மணிக்கு ஒலக்கூர் - திண்டிவனம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, சி2 பெட்டியில் இருந்து திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதையடுத்து, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், டிக்கெட் பரிசோதகர், ரயில் மேலாளர் ஆகியோர் எச்சரிக்கை அலாரம் ஒலித்த இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.