சென்னை: வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே, அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முதல் நிலை மீட்பர்கள், மாநில பேரிடர் மீட்புப் படைகளை நிலை நிறுத்தி, தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சென்னை உட்பட 4 மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை தமிழகத்தின் வட பகுதிகளான சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெறுகின்றன. இப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்தப் பணிகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் தலைமையில், தொடர்புடைய அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.