வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக எச்.டி.எஃப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுக்கு 2.91 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ..!!

1 week ago 9

மும்பை: வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி , எச்.டி.எஃப்.சி. வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதுகுறித்து ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் சில விதிகளை மீறியதற்காகவும், டெபாசிட் மீதான வட்டி விகிதம், கேஒய்சி, விவசாயிகளுக்கான கடன் ஆகியவற்றில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காகவும் ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி, தகுதியற்ற நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு வைப்பு கணக்குகளைத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீடு (UCIC) வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை ஒதுக்கியுள்ளது. அதுபோல, விவசாயக் கடனுக்கு ரூ.1.60 லட்சம் வரையிலான பிணையப் பாதுகாப்புத் தொகையை பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு டெபாசிட் மீதான வட்டி விகிதம், வங்கிக் கடன்களை வசூலிக்கும் முகவர்கள், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை ஆகியவை குறித்த சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்கள், வைப்புத்தொகையை வைக்கும்போது ரூ.250 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுக்கான முதல் ஆண்டு பிரீமியத்தை பரிசாக வழங்கியுள்ளது. தகுதியற்ற நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு வைப்புக் கணக்குகளைத் திறந்து, வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் தொடர்புகொண்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

The post வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக எச்.டி.எஃப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுக்கு 2.91 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ..!! appeared first on Dinakaran.

Read Entire Article