சென்னை: யூடியூபரான வாராகியின் மனைவி மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் அவரது வீட்டின் முன்பாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சார்-பதிவாளரை பணம் கேட்டு மிரட்டியதாக யூடியூபரான வாராகி என்பவரை மயிலாப்பூர் போலீஸார் கடந்த செப்.13ம் தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், வாராகியின் மனைவி நீலிமா மற்றும் குழந்தைகளை போலீஸார் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகக் கூறி வாராகியின் சகோதரி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.