மதுரை: மணவிழா கண்ட மணமக்கள் தங்கள் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணம் மொத்தத்தையும், மதுரையில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மூலம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புதிய புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்யாணம், காது குத்து, கிடா வெட்டு போன்ற சுப நிகழ்ச்சியின் போது மொய் செய்யும் பழக்கம் காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. ஆரம்பத்தில், விஷேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், தாங்களாகவே முன் வந்து அன்பளிப்போ அல்லது பணமோ, விழா நடத்துபவருக்கு உதவும் என எண்ணி மரியாதை நிமித்தம் அளிக்கும் வழக்கம் நடை முறைக்கு வந்தது. காலப்போக்கில் வீட்டு விசேஷங்களில் மொய் பணம் செய்வது பாரம்பரிய பழக்கவழக்கமாக மாறியது.