மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியாக சரிந்ததால் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. உபரிநீர் திட்டத்தில் 0.51 டிஎம்சி நீர் எடுக்கப்பட்டு, இதுவரை 35 ஏரிகள் முழுமையான நிரப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூலை மாதம் 30- ம் தேதி எட்டியது.