சாத்தூர்: “தமிழக முதல்வர் ஸ்டாலினின் பி-டீமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார், மேலும், இந்த ஆட்சி முடியும் வரை எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய மாட்டோம் என ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது” என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை (செப்.16) அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி. தினகரனுக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.