சென்னை: மாவட்டம் தோறும் நீர்நிலைகளை சிறப்பாக பராமரிப்போருக்கான ‘முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது’ வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் இன்று (செப்.17) வெளியிட்ட அரசாணையின் விவரம்: கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், வனத்துறை அமைச்சர், “தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நீர்நிலைகளை பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் 100 பேருக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும்’’ என அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிர்வாக ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு, தமிழ்நாடு பருவகால மாற்ற திட்ட நிதியில் இருந்து இந்த விருதுக்கான நிதியை வழங்கும் வகையில், கருத்துரு அனுப்பும்படி, சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது.