சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்.12) காலமானார். அவருக்கு வயது 72. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் - “இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையான சீதாராம் யெச்சூரியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.இளம் வயதில் இருந்தே நீதிக்காக போராடிய பயமறியா தலைவரான அவர், மாணவர் தலைவராக இருந்தபோது, அவசர நிலைக்கு எதிராக அவர் நின்றார். தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அவரது முற்போக்கு சிந்தனைகள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும். அவர் உடனான எனது நினைவுகளும்,பேச்சுகளும் எப்போதும் போற்றுதலுக்குரியவை.இந்த துயரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.