பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.2.60 கோடியில் புதிய திட்டப்பணிகள்

2 hours ago 4

*அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார்

ஈரோடு : பெருந்துறை பெத்தாம்பாளையம் மற்றும் நல்லாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சி, பொன்னான்டாவலசு,

தேவாளிபாறை நெசவாளர் காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 750 மீட்டர் நீளத்திற்கு மண் சாலையினை தார் சாலையாக அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஈரோடு திங்களூர் மெயின்ரோடு கரிச்சிகாடு பிரிவிலிருந்து பொன்னான்டாவலசு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பழுதுபட்ட தார்சாலையினை ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணியினையும், மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில் காலனி பகுதியில் பழுதுபட்ட தார்சாலை புதுப்பித்தல் பணியினையும்,

பெத்தாம்பாளையம் பேரூராட்சி கருக்கம்பாளையம்புதூர் பகுதியில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயகூடம் பராமரிப்பு பணி மற்றும் முதல் தளத்தில் சமையல் அறை, உணவு உண்ணும் அறை அமைக்கும் பணியினையும், நல்லாம்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.41.50 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில், கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல, பெத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செங்கோடம்பாளையம் பகுதியில் 211 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பகுதி நேர நியாய விலைக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னதாக, பெருந்துறை சாலை, வாய்க்கால் மேடு அருகில் பனை விதை நடும் விழாவினை துவக்கி வைத்து, பனை விதைகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.2.60 கோடியில் புதிய திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article