பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

3 hours ago 4

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மல்லேஸ்வரா பகுதியில் வீராண பவன் பகுதியருகே வியாலிகாவல் என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த பகுதியருகே வசித்தவர்கள் மூக்கை பொத்தி கொண்டு சென்றனர்.

இதன்பின் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த குடியிருப்பின் உள்ளே இருந்த பிரிட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. அந்த உடல் 30 துண்டுகளாக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கூடுதல் காவல் ஆணையாளர் (மேற்கு) சதீஷ் குமார் கூறும்போது, பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது. உடல் பாகங்கள் சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்டு இருக்க கூடும். அவர் யாரென்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். வேறு மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்து வசித்து வந்திருக்கிறார். ஆரம்பகட்ட விசாரணைக்கு பின்னர் மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

மோப்ப நாய் குழு மற்றும் கைரேகை குழுவினர் இவற்றுடன் தடய அறிவியல் குழுவினரும் அழைக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். போலீசார் சென்றபோது, உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் 2022-ம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண் அவருடைய காதலர் அப்தப் அமீன் பூனாவாலா (வயது 29) என்பவரால் கொலை செய்யப்பட்டார். வாக்கரின் உடலை 35 துண்டுகளாக ஆக்கி குடியிருப்பு பகுதிக்கு அருகே பூனாவாலா வனப்பகுதியில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் நடந்துள்ள சம்பவம் அந்த பகுதியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article