பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன்

1 week ago 11

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை குடும்பத்தைக் கைவிட்டதால், தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்துள்ளார். தாயார் செங்கல் தூக்கும் கூலி வேலைக்குச் சென்றும், காய்கறிகள் விற்றும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தைக் கட்டிக்காத்து நடத்தியுள்ளார்.

மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாகச் சென்ற பேருந்துச் சக்கரத்தில் சிக்கி அவரது வலது கால் நசுங்கியது. அது அவரை நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கியது. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே உயரம் தாண்டுதலில் அசத்திவந்த மாரியப்பன் தங்கவேலு, தமது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரால் உந்தப்பட்டு தடகளத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச பாரா போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய அவர், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்றார்.

2016 பாராலிம்பிக் போட்டிகளின்போது அளித்திருந்த பேட்டியில், “பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.” என்று மாரியப்பன் கூறியிருந்தார்.

பள்ளியில் படித்துக்கொண்டே மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாரியப்பன், 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார். 2013இல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் உயரம் தாண்டிய விதம், பயிற்சியாளர் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக, மாரியப்பனுக்கு பெங்களூருவில் வைத்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2015இல், தமிழ்நாட்டின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ (BBA) பட்டப்படிப்பை முடித்தார் மாரியப்பன்.

2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தகுதி பெற, துனிசியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், மாரியப்பன் 1.78 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். இதைத்தொடர்ந்து ரியோ பாராலிம்பிக் போட்டியில், T42 பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய அளவிலான சாதனையைப் படைத்தார் மாரியப்பன். அவர் தங்கம் வென்ற பிறகு, அவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. மத்திய அரசு மாரியப்பனுக்கு, 2017ஆம் ஆண்டில் பத்ம விருதையும், 2020ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வழங்கிக் கெளரவித்தது.

நவம்பர் 2019இல், துபாயில் நடந்த ‘2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்’ ஆண்களுக்கான T63 உயரம் தாண்டுதலில் 1.80 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார். அதைத் தொடர்ந்து, டோக்கியோ 2020 (கொரோனா காரணமாக 2021இல் நடத்தப்பட்டது) பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அப்போது நடந்த, T63 உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016 ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில்(2021இல் நடத்தப்பட்டது) உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார். இந்த நிலையில், 2024இல் பாரிஸில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்று பாரா ஒலிம்பிக்கில் மூன்று பதக்கம் வென்ற நான்காவது வீரர் என்ற சாதனையையும், தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் மாரியப்பன் படைத்துள்ளார்.

மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ‘‘ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்களை வென்றது மிகவும் பாராட்டுக்குரியது. அவருடைய திறன்கள், தொடர் முயற்சி மற்றும் உறுதி அபூர்வமானவை” என்று தனது பாராட்டுகளை மோடி தெரிவித்திருந்தார்.

2024 பாராலிம்பிக் போட்டியில் T63 பிரிவில் இந்திய வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினர். இதில் குறைந்தபட்ச உயரமான 1.81 மீட்டர் தூரத்தை இந்திய வீரர்கள் சரத், மாரியப்பன், சைலேஷ் குமார் ஆகிய மூன்று பேரும் தாண்டிச் சென்றனர். இதன் அடுத்து 1.85 மீட்டர் தூரத்தை மாரியப்பன் அபாரமாகத் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். ஆனால் 1.88 மீட்டரில் சரத்குமார் மற்றும் அமெரிக்க வீரர் ஏல்ரா அபாரமாகத் தாண்டி மாரியப்பனை முந்தினர். எனினும் மாரியப்பன் 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்ட முடியவில்லை. இதையடுத்து மாரியப்பனுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. தொடர்ந்து அபாரமாகச் செயல்பட்ட சரத்குமார் 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்.

அதன்பிறகு 1.91 மீட்டர் தூரத்தைத் தாண்டும்போது சரத்குமாரால் தாண்ட முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க வீரர் ஏல்ரா 1.94 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் காரணமாக சரத்குமாருக்கு வெள்ளிப் பதக்கமும், மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

– முத்து

பாராலிம்பிக் போட்டிகளில்
தொடர்ந்து மூன்று முறை
பதக்கங்களை வென்றது
மிகவும் பாராட்டுக்குரியது.
அவருடைய திறன்கள்,
தொடர்முயற்சி மற்றும் உறுதி
அபூர்வமானவை

The post பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் appeared first on Dinakaran.

Read Entire Article