புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு உரிய சிகிச்சையளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயியான இவரது மகன் அஜித் (23). கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் தனது வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு அஜித் தனது வீட்டின் முன் வாசலில் படுத்துத் தூங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.13) அதிகாலையில் அஜித்தை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில், இளைஞர் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.