திருவாரூர்: பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் வேளாண் அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2023 - 24-ம் நிதியாண்டுக்கான சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை அண்மையில் விடுவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 561 வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான உரிமம் பெற்ற இப்கோ டோக்கியோ நிறுவனமானது, 72 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கி உள்ளது. இதனால் எஞ்சியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.