பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி

17 hours ago 2

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் விஷ சாராயம் அருந்தியதால் 14 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் மஜிதா பகுதிக்கு உட்பட்ட பங்காலி, பட்டல்புரி, மராரி கலாம், தெரேவால் கிராமங்களில் சிலர் விஷ சாராயம் குடித்து மயக்க நிலையில் கிடந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அமிர்த சரஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்க நிலையில் இருந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அமிர்தசரஸ் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் மனிந்தர் சிங் கூறுகையில், ‘நேற்றிரவு 9.30 மணியளவில் எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், விஷ சாராயம் குடித்தவர்களில் 14 பேர் பலியாகினர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷ சாராயத்தை சப்ளை செய்த ஐந்து பேரை கைது செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில், விஷ சாராயத்தை உள்ளூரை சேர்ந்த சிலரே தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் குடித்த விஷ சாராயத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். விஷ சாராயம் குடித்து பலியான குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

The post பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article