
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக தனது சொந்த காரில் சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவரின் மகன் ஆதர்ஷ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். பத்தனம்திட்டா பகுதியில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நசுங்கியது. இந்த கோர விபத்தில் ஆதர்ஷ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஹைட்ராலிக் கட்டர் மூலம் காரை வெட்டி ஆதர்ஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.