தொடரை வென்றது இந்தியா யு-19

2 hours ago 2

புதுச்சேரி: ஆஸ்திரேலியா யு-19 அணியுடனான 2வது இளைஞர் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா யு-19 அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. புதுச்சேரி கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 49.3 ஓவரில் 176 ரன் சேர்த்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அடிசன் ஷெரிப் 39 ரன் எடுத்து ரன் அவுட்டானார். இதையடுத்து, 50 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா யு-19 களமிறங்கியது. சஹில் பராக், ருத்ர படேல் இணைந்து துரத்தலை தொடங்கினர்.

ருத்ர படேல் 10 ரன் மட்டுமே எடுத்து ஹோக்ஸ்ட்ரா பந்துவீச்சில் ரனால்டோவிடம் பிடிபட்டார். எனினும், சஹில் பராக் – அபிக்யான் குன்டு ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க, இந்தியா யு-19 அணி 22 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சஹில் பராக் 109 ரன் (75 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்), அபிக்யான் குன்டு 53 ரன்னுடன் (50 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி செப்.26ல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகளில் (4 நாள், அதிகாரப்பூர்வமற்றது) விளையாட உள்ளன.

The post தொடரை வென்றது இந்தியா யு-19 appeared first on Dinakaran.

Read Entire Article