சென்னை: சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.