மதுரை: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக அருந்ததியருக்கான உள் இடஓதுக்கீட்டை திமுக காவு கொடுக்கக் கூடாது என ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் எச்சரித்துள்ளார்.
‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அருந்ததியர் இல்லாத பட்சத்தில் பிற சமூக மக்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற அரசாணை எண் 61-ஐ ரத்து செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்’ போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில், மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.