திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு முன்னாள் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

3 hours ago 2

திருமங்கலம், செப். 20: திருமங்கலம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கிராம மக்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலம் அருகேயுள்ள சின்ன உலகாணி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் தங்கள் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை. சின்ன உலகாணியில் ஆண்டிபட்டி – சேடபட்டி கூட்டுக்குடிநீர்த்திட்டத்தில் கீழ் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் பைப்லைன் சேதமடைந்திருப்பதாக கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை வழங்கவில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். மேலும் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தொிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உதயகுமார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

The post திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு முன்னாள் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article