திருக்கோவிலூர், விக்கிரவாண்டியில் பரபரப்பு: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

3 days ago 3

 

திருக்கோவிலூர், செப். 17: திருக்கோவிலூர், விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துணை அலுவலராக விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த 2 வருடமாக பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக கையூட்டு பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ், ஆய்வாளர் அருள்ராஜ், சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மதியம் 2 மணியளவில் திடீரென உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதலாக 100 டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

ஆகையால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சமயத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் உள்ளே புகுந்து சோதனை நடத்தியதையடுத்து திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் சந்தியாகு தலைமையில் போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் மூலம் பொதுமக்கள், அலுவலகம், பத்திரப்பதிவு எழுத்தர் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைப்பற்றியுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தின் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டு நடத்தினர்.

இதில் கணக்கில் வராத ரூ.94,570 பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் திருக்கோவிலூர், விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருக்கோவிலூர், விக்கிரவாண்டியில் பரபரப்பு: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article