திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

1 hour ago 2


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் திமுக பிளக்ஸ் பேனரை கிழித்த வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவ.27ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பள்ளிவாசல் அருகே நேற்று முன்தினம் திமுக சார்பில் புதிய வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பேனர்களை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நவுபல் (34), பிரவீன்குமார் (35), உதயகுமார் (34), அஜித்குமார் (28), சதாம்உசேன் (29), அக்பர்அலி (28) பாட்ஷா (27) உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு கிழித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் அப்பாஸ் (45) இதனை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கத்தியை காட்டி, இதுபோல் பிளக்ஸ், வால்போஸ்டர்களை ஒட்டினால் மீண்டும் கிழித்து விடுவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் (52) மற்றும் அதிமுக நிர்வாகி அக்பர் அலி (28) உள்ளிட்ட இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத்தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article