சென்னை: திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சித் தேவையில்லை என தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக பாஜக மட்டுமல்லாமல் தமிழக மக்கள் சார்பிலும் மூன்றாவது முறையாக இந்தியாவை வலிமையாக வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். அதேபோல், 100 நாட்களைக் கடந்து சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதற்கும் பிரதமருக்கு வாழ்த்துகள்.