சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 79 ஆயிரத்து 672 ஏக்கர் விளை நிலங்கள் 33 ஆயிரத்து 283 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகியான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக கோயில்களுக்குச் சொந்தமான 80 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை பாக்கியைக்கூட முறையாக செலுத்துவதில்லை. எனவே கோயில்களுக்கு சொந்தமான விளை நிலங்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.