சென்னை: தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரான பி.டி. அரசகுமார் மற்றும் பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி கடந்த 2011 ஜன.1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகளின் புதிய கட்டிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கும் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்காக அளிக்கப்படும் விண்ணப்பத்தை நகர்ப்புற திட்டமிடல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது.