தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 days ago 4

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது.

பெரியாருக்கு முன்பே தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைகள், பெண் சுதந்திரம் போன்றவற்றை சிலர் பேசியிருந்தாலும், பெரியார் தனது பேச்சுக்கள் மூலம் இவற்றுக்கு எதிராக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இந்து மாதத்தில் உள்ள சாதிய படிநிலைகளை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், சாதிய படிநிலைகளில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை சுரண்ட பார்ப்பனியர்கள் சனாதன தர்மத்தை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து விமர்சித்தார்.

சாதிய ஒடுக்குமுறைகள் மட்டுமல்லாது சமூகத்தில் பின்தங்கியுள்ள சாதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான இவரது போராட்டம் காரணமாகவே, இந்திய அரசியலமைப்பில் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் வரதட்சணை எதிர்ப்பு, விதவை மறுமணம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கான பாலியல் சமத்துவம், பெண் கல்வி போன்றவை குறித்தும் தனது பேச்சுக்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்க தடை, கோவிலில் நுழைய தடை, காலில் செருப்பு அணிய தடை போன்ற அனைத்து தடைகளையும் உடைத்தெறிய கடுமையாக போராடிய பெரியாரை, அவரது 146வது பிறந்த தினமான இன்று நினைவுகூர்வோம்.

அந்த வகையில் இன்று(17.09.2024) சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட இருக்கிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

The post தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article