தூத்துக்குடி: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நேற்று அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10-ம் தேதி காலமானார். இரண்டு நாட்கள் சென்னையில் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் இன்று காலை 7.30 மணியளவில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.