டெல்லி புதிய முதல்-மந்திரியாக 21ம் தேதி பதவியேற்கிறார் அதிஷி: ஆம் ஆத்மி அறிவிப்பு

16 hours ago 4

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-மந்திரி அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு நிபந்தனை விதித்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டெல்லி துணை நிலை கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் கவர்னரிடம் கொடுத்தார்.

இதையடுத்து, டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பதவி விலகியுள்ள முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதமும் திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி புதிய முதல்-மந்திரியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிஷி பதவியேற்பார், அவருடன் மற்ற மந்திரிகளும் பதவியேற்பார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Read Entire Article