சென்னை: “மேடையில் தமிழ் பேசுகிறார் என்பதற்காக, ஒரு மருத்துவத் துறையைச் சேர்ந்தவரை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்திருப்பது பொருத்தமற்றது. செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலோடு, தகுதியான ஒருவரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும்,”என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. தொல்பழங்காலம் முதல் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.இந்த நிறுவனம் செம்மொழித் தமிழின் தொன்மை, தனித் தன்மை, அவற்றின் மரபுத் தொடர்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.