பசென்னை: “சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்கூட்டியே படகுகள், மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும்,” என தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் இன்று (செப்.18) தொடங்கியது. தக்ஷிண பாரத் ராணுவ தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை சேர்ந்த 35 முகமைகளின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் தீரஜ் சேத், தென்மாநில ராணுவ தளபதி கரன்பீர் சிங், தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.