சாலையோரம் படுத்திருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியதில் பரிதாப சாவு

3 days ago 3

 

புதுச்சேரி, செப். 17: புதுச்சேரி கருவடிக்குப்பத்திலிருந்து முத்தியால்பேட்டை செல்லும் வழியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கடந்த 14ம் தேதி இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அடிபட்ட நிலையில் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. லாஸ்பேட்டை போலீசார் அவரிடம் விசாரிக்க சென்றபோது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் திடீரென நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது. இறந்த நபர் அங்குள்ள சாலையோர உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு, சாலை ஒரத்தில் படுத்து இருந்தார்.

அப்போது சிவாஜி சிலை பகுதியில் இருந்து வந்த வெள்ளை நிற கார் அந்த பகுதியில் வளைந்து திரும்பியபோது காரின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கி இருப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாஸ்பேட்டை போலீசார் இவ்வழக்கை விபத்து வழக்காக மாற்றி, வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post சாலையோரம் படுத்திருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியதில் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Read Entire Article