சென்னை: “சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு அனுமதி மறுத்து தலைவர்களை கைது செய்துள்ள தமிழக அரசின் அணுகுமுறை ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும். அரசமைப்புச் சட்டத்தை மத்திய அரசிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமல்ல, கொரியன் முதலாளிகளிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். 15ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம், சட்டத்துக்கு புறம்பான பணி நிலைமைகள், அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் என்று ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் சேர்ந்து சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும் தொழிலாளர் நலத்துறை சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது. இதை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.