கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

3 hours ago 4

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்டங்களாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிபதி அப்துல்காதர் மதுரை நீதிமன்ற பதிவாளராக பணியிட மாற்றத்தில் சென்றதால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையிலான போலீசாரும் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி லிங்கம் வழக்கை அக்டோபர் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Read Entire Article