கேளம்பாக்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

4 hours ago 2

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 14வயது சிறுமி. 9ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 3 பேர், சிறுமிடம் பேச்சு கொடுத்துள்ளனர். இதில், ஒருவன் திடீரென அப்பெண்ணின் பின்பக்கம் சென்று, வாயில் துணியை வைத்து அழுத்திக்கொள்ள மற்ற 2 பேரும் அச்சிறுமியை தரதரவென இழுத்து சென்றுள்ளனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

பின்னர், வெளியே ஓடிவந்த சிறுமி அலறியடித்து கூச்சல் போட்டார். சத்தம்கேட்டு, ஓடிவந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உருட்டுக் கட்டையுடன் 3 பேரையும் தேடி ஒருவனை மட்டும் பிடித்தனர். அவனை சரமாரியாக அடித்து உதைத்ததில் செல்போன் திருட வந்ததாக உளறினான். இதையடுத்து, தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தததில், சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, இந்த வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் கீதா வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (21) என்பதும், இவர் உள்பட 3 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேளம்பாக்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Read Entire Article