கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

3 hours ago 1

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு, நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒன்றிய அரசு இத்தகைய திசைதிருப்பல் உத்தியை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சி இயலை சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்னைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும். இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பாஜவின் ஆணவத்தைத் திருப்திபடுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது. ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article